தரைமட்டமான 24 வீடுகள்… முதல்வர் பிறப்பித்த அதிரடி ஆணை!
திருவெற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்த மக்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டித் தரப்படும். 24 குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்குச் சொந்தமான 20 ஆண்டுகள் பழமையான 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் டி பிளாக் என்பதில் உள்ள 24 வீடுகள் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த கட்டிடத்தில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டு இருந்ததால் அதில் வசித்து வந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும், இதனால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் காவல்துறை மற்றும் அரசு தரப்பிலிருந்து முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா? என தீவிர மீட்பு பணியில் தீயணைப்பு படை வீரர்களும்,அப்பகுதி மக்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் மற்றும் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற் வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.
விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்து விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன் .
பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்
இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.