தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தடை…. நாளை அதிரடி அறிவிப்பு?
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் இருக்காது என்றும், மேலும் பல கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர வாய்ப்பு என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒமைக்ரான் அச்சம் உலகெங்கும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவிலும் ஒமஒக்ரான் பரவலுக்குப் பின்னர் தினசரி வைரஸ் பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் வைரஸ் பாதிப்பு மளமளவென உயரத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா உயரத் தொடங்கியிருக்கும் என அஞ்சப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஒருபுறம் கொரோனா, மறுபுறம் ஒமைக்ரான் என இருவேறு தொற்றுக்கள் கிடுகிடுவென பரவி வருகின்றன. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது, தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில், மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது மற்றும் ஊரடங்கு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் இருக்காது என்றும், அதேபோல கடைகளுக்கான நேரக் கட்டுப்பாட்டு அதிகரிக்கப்படும். அநேகமாக இது நாளை முதல் அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.