ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு..!
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருகிற ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இதனைத் தொடர்ந்து புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை திருத்தம் செய்து தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும், அரசு பள்ளிகள் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு அவர்கள் நேரில் வருவதை தவிர்த்து ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் நாளொன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த நிலையில் இந்த புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.