பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பா?… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்தாண்டு கொரோனா பரவல் குறைந்ததையடுத்து 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது. தமிழகத்தில் ஒமைக்ரான பரவலையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பள்ளிகளை பொறுத்தவரை பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு, 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மற்ற வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அடுத்தடுத்து கொரோனா பரவல் அதிகரித்ததால் 10,11,12 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட அனைவருக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுப்பளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில், பள்ளிகளை பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியை திறப்பது குறிப்பது அனுமதி அளிக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், வகுப்புகள் சுழற்சி முறையில் இல்லாமல் வழக்கம் போல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.