திருமணத்துக்கு பிறகு கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்யும் காஜல்!
தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் காஜல்அகர்வால். இவர் 2020-ல் மும்பை தொழிலதிபர் கௌதம் கிட் சிலுவை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு காஜல் அகர்வாலுக்கு படவாய்ப்புகள் குறைந்துள்ளன என்றும், இளம் கதாநாயகர்கள் அவரோடு ஜோடி சேர மறுப்பதால் வயதான நடிகர்கள் படங்களில் நடிக்கிறார் என்றும் தகவல் பரவியுள்ளது.
தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதால் கமல்ஹாசனின் இந்தியன் படத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் திருமண வாழ்க்கையால் சினிமா வாழ்க்கை பாதித்துள்ளதா? என்பதற்கு காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணம் எனது சினிமா வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
திருமணம் ஆனதும் நடிகைகள் சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலைமை தற்போது இல்லை. நடிகைகளின் சொந்த வாழ்க்கை முடிவுகள் சினிமாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை ரசிகர்கள் புரிந்துள்ளனர். எனவே சொந்த வாழ்க்கை மாற்றங்கள் பற்றி யோசிக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தலாம். திருமணத்துக்கு பிறகு கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்கிறேன் என்றார்.