சிறையில் இருக்கும் படப்பை குணாவுக்கு ஆப்பு… பாய்ந்தது குண்டர் சட்டம்!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த குணா, பிரபல ரவுடியாக மாறியதை அடுத்து படப்பை குணா என்ற அடைமொழியும் சேர்ந்து கொண்டது. கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த படப்பை குணா, கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இதையடுத்து தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த குணா, சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 26ஆம் தேதி சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கிருஷ்ணன் உத்தரவிட்டார். இதனையடுத்து புழல் சிறையில் படப்பை குணா அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறையில் உள்ள படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளரின் ஆலோசனையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பொது அமைதியையும் பொது ஒழுங்கையும் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி, குணாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் அந்த கடிதம் புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.