ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுப்பு.. பகீர் கிளப்பும் வீடியோக்கள்!
வடக்கு ஜப்பானில் புகுஷிமா கடற்கரையில் இன்று மாலை 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு கடற்கரையின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நிலநடுக்கம் காரணமாக டோக்கியோ பகுதியில் உள்ள 2 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
புகுஷிமா பிராந்தியத்தின் கடற்கரையில் 60 கிலோமீட்டர் (37 மைல்) ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு 11:36 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு, வடகிழக்கு ஃபுகுஷிமா மற்றும் மியாகி பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் ஒரு மீட்டர் அளவிற்கு சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
டோக்கியோ மின்சாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, டோக்கியோவில் 700,000 குடும்பங்கள், மத்திய கான்டோ பகுதியில் குறைந்தது இரண்டு மில்லியன் குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. வடகிழக்கில், 156,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை என்று பிராந்திய எரிசக்தி நிறுவனமான Tohoku Electric Power தெரிவித்துள்ளது.
வடக்கு ஜப்பானின் ஒரு பகுதியான புகுஷிமா, 11 ஆண்டுகளுக்கு முன்பு 9.0 நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பேரழிவிற்கு ஆளானது. அதன் பின்னர் உலகையே அச்சத்தில் ஆழ்த்திய அணு உலை விபத்தும் நிகழ்ந்துள்ளது.