டெட் தேர்வுக்கு புதிய பாடத் திட்டம் வெளியீடு!
தமிழகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் டெட் (TET) தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) நடத்தி வருகிறது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள், கடந்த மார்ச் மாதம் 14ம் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 13ல் நிறைவடைந்தது.
இரண்டு தாள்கள் கொண்ட தேர்வாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. 1 முதல் 5ம்ஆ வகுப்பு வரை பள்ளிகளில் ஆசிரியர்களாக கற்பிப்பதற்கு தாள் ஒன்றிலும்; 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கற்பிப்பதற்கு தாள் இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தாள் ஒன்றையும், பி.எட் முடித்தவர்கள் தாள் இரண்டையும் எழுதலாம். இதற்காக 3 மணி நேரம் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.
நடப்பாண்டுக்கான டெட் தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், டெட் தேர்வுக்கான புதிய பாடத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இரண்டு தாள்களுக்குமான திருத்தப்பட்ட பாடத் திட்டத்தை www.trb.tn.nic.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.