இலங்கைக்கு நிதியுதவி வழங்க முன்வந்த உலக வங்கி..   

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வரலாறு காணாத அளவு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என கடந்த சில மாதமாக நாடே தலைகீழாக மாறியுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்ட இந்த பொருளாதார சிக்கலை தீர்க்க இலங்கை அரசு பல நாடுகளிடம் கடன் உதவி கேட்டு வருகின்றனர். நிதி சிக்கல்களை சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது என  அதிபருக்கு எதிராக மக்கள் தொடர்ந்து  போராட்டங்கள், முற்றுகைகள் என நடந்து வருகிறது. இந்த போராட்டங்கள் தீவிரம் அடைந்த நிலையில் அதை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு ரூ.4,500 கோடி நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இறக்குமதி மூலம் சமாளிக்கும் வகையில் இலங்கைக்கு கடன் உதவி வழங்க முன்வந்துள்ளதாக  உலக வங்கி தெரிவித்துள்ளது.  

இலங்கைக்கு முதல்கட்டமாக  600 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.4,500 கோடி) என்றும் அதை தொடர்ந்து மேலும் 400 மில்லியன் டாலர்களை வழங்க இருப்பதாகவும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளதாக  இலங்கை அதிபர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியாவும் ரூ.7,600 கோடி நிதி உதவி மற்றும்  இலங்கைக்கு தேவையான டீசல், அரிசியை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *