உக்ரைன்- ரஷ்யா போர்..! உக்ரைனுக்கு உதவி செய்ய முன்வந்த ஜி 7 நாடுகள்..!
உக்ரைன்- ரஷ்யா போர் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகிய நிலையில் ரஷ்யாவுக்கு உக்ரைன் தக்க பதிலடி கொடுத்து வருகிறது இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போராடும் உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற வேண்டும் என்றும் நேட்டோ அமைப்பு தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் தொடர்பாக விவாதிப்பதற்காக ஜி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஜெர்மனியில் நேற்று நடைபெற்றது. அப்போது உக்ரைனில் நடக்கும் போர் ஏழை நாடுகளை அச்சுறுத்தும் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று ஜி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் எச்சரித்தனர்.
இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஜெர்மனி வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் உக்ரைனியர்களிடம் உள்ள தானியங்களை வெளியிடுவதற்கான வழிகள் கண்டுபிடிக்க படாவிட்டால் வரும் மாதங்களில் சுமார் 5 கோடி மக்கள் பட்டினியை எதிர்கொள்ள நேரிடும் என்றனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு ரஷ்ய எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த போர் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.