#Breaking தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு…. முதல்வர் கைக்குப் போன இறுதி விசாரணை அறிக்கை!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் குழு நடத்திய விசாரணை தொடர்பான இறுதி அறிக்கை இன்று முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் 36 கட்டங்களாக துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது பணியிலிருந்த மாவட்ட ஆட்சியர், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், நேரில் பார்த்தவர்கள், போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தியது.
மொத்தம் 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆணையத்தின் இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று சமர்ப்பித்துள்ளார்.