பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூட வேண்டும்..! ஆப்கானிஸ்தானில் மேலும் ஒரு கட்டுப்பாடு..!!
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தாலிபான்களை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். தாலிபான்கள் கையில் அப்கானிஸ்தான் சென்றதால் பழமைவாத சட்டங்களை மீண்டும் கொண்டு வர வாய்ப்புள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் தங்களின் முந்தைய ஆட்சிக் காலத்தை போல கடுமையான சட்ட நடைமுறைகள் இருக்காது என தாலிபான்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர். அதன்படி பொது இடங்களில் பெண்கள் பர்தா அணிய வேண்டும்.
அதேபோல் அரசுப் பணிகளில் உள்ள ஆண்களின் மனைவியோ, மகளோ பர்தா அணியாவிட்டால் அவர்கள் மீதும் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க கூடாது, பெண்கள் மேல்நிலைக் கல்வி பயில தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் தலிபான்கள் பிறப்பித்துள்ளனர்.
பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டதற்கு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் பயன்படுத்தியதைப் போன்ற முக கவசங்களையும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் அணிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாகவும் தலிபான் அரசின் நல்லொழுக்கங்களுக்கான துறையின் செய்தித் தொடர்பாளர் ஆகிப் மகாஜார் தெரிவித்துள்ளார். இது தற்போது பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.