மீண்டும் சிக்கலில் சிக்கிய சீனா..!! ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கு..!!
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சீன நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் கொரோனா அதிகரிப்பு காரணமாக சீனா ஷாங்காய் நகரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட இரு நாட்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்று அதிகரிப்பதால் கடந்த வாரம் வரை ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஜூன் முதல் வாரம் முதல் ஷாங்காய் நகர் முழுவதும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு போக்குவரத்து, கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சீனாவின் ஜிங்கன் மற்றும் புடாங் மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் மீண்டும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கையின்படி ஊரடங்கு நாட்களில் மெகா பரிசோதனை, முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் இன்னும் தொடர்ந்து வருகிறது.