புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு கலங்கிய சூர்யா!
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். 46 வயதே ஆன புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே உலுக்கியது.
பெங்களூருவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் உடலுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நந்தமூரி பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 2 நாட்கள் ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், புனித் ராஜ்குமாரின் உடல் கடந்த 31ம் தேதி கோரகுண்டேபாளையாவில் உள்ள பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த ஸ்டூடியோவில் தான் புனித் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார், தாய் பர்வதம்மா ஆகியோரின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்தில் தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று நடிகர் விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று காலை நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தினார். கோரகுண்டேபாளையாவில் உள்ள பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்ற சூர்யா, அவரது புகைப்படம் முன்பு நின்று கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி காண்போரை நெகிழ வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ…