இரு பிள்ளைகளின் தாயாக.. முதல்வருக்கு நன்றி கூறிய ஜோதிகா!
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய்பீம். சூர்யா, பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் திரையுலகினர் பலரும் சூர்யாவின் நடிப்பையும் படத்தின் கதைக்களத்தையும் பாராட்டி வருகின்றனர். இருளர் பழங்குடியினர் இந்த சமூகத்தாலும், காவல்துறையாலும் எப்படி அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் ஆளாகிறார்கள் என்பதை விளக்கும் விதமாக படம் அமைந்திருந்தது. பழங்குடியின மக்கள் முறையான சான்றிதழ் இன்றி, எவ்வாறு அதிகாரத்தால் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை உரக்க சொன்னது.
படத்தை பாராட்டியதோடு மட்டுமின்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இன மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, நலவாரிய அட்டை உள்ளிட்டவைகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள நிலையில், ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
“மதிப்பிற்குரிய ஐயா மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவற்றை நிறைவேற்ற உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதன் மூலம் அதை நிரூபித்துள்ளீர்கள், மிக முக்கியமாக, அதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவருவது. தலைமை என்பது ஒரு செயல், பதவி அல்ல என்பது நமக்கு நிரூபனமாகியுள்ளது. கல்வி முறையில் நீங்கள் கொண்டு வரும் நேர்மறையான மாற்றங்களை குடிமகளாக நானும், அகரம் பவுண்டேஷனும் கடந்த 16 ஆண்டுகளில் அனுபவிக்காத ஒன்று.
எண்ணற்ற இருளர் மற்றும் குறவர் குடும்பங்களுக்கு நீங்கள் பட்டாக்கள், சாதி சான்றிதழ்கள் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய மானியங்களை விநியோகித்தது மனித குலத்திற்கு கிடைத்த வெற்றியாகும், மேலும் உங்களது செயல்கள் நமது அரசியல் அமைப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
“முதலில் இருந்து இறுதிவரை நாம் இந்தியர்கள்” என்ற அம்பேத்கரின் நம்பிக்கையை உண்மையாக்கியதற்கு நன்றி. ஒரு குடிமகள் என்ற முறையில் மட்டுமின்றி தியா மற்றும் தேவ் ஆகியோரின் தாயாகவும் உங்கள் நிர்வாகம் மற்றும் உடனடி நடவடிக்கைகளுக்காக உங்களை முழு மனதுடன் நன்றி கூறிக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.