விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு…. ஜெய்பீம் பற்றி தளபதி சொன்ன கமெண்ட்!
ஜெய்பீம் படத்தை தயாரித்ததோடு, அதில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களான சூர்யா, விஜய் இருவரும் நேற்று சந்தித்துக் கொண்டதாக சோசியல் மீடியாவில் தகவல் கசிந்துள்ளது.
சூர்யா தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் விஜய்யும் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் நேற்று சென்னை பெருங்குடியில் நடந்துள்ளது. திரையுலகில் ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்ததைப் போலவே நிஜத்திலும் விஜய் – சூர்யா இடையே நல்ல நட்பு உண்டு. இருவரது படத்தின் ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடப்பதால், நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரில் சந்தித்து பேசலாமே என திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று மதியம் எதற்கும் துணிந்தவன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விஜய் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு விஜய்யை பூங்கொத்து கொடுத்து சிரித்த முகத்துடன் சூர்யா வரவேற்றுள்ளார்.
அதன்பின்னர் இருவரும் ஒன்றாக சந்தித்து பேசியதோடு, ஒன்றாக அமர்ந்து மதிய உணவும் சாப்பிட்டுள்ளனர். அப்போது ஜெய்பீம் படம் குறித்த தனது பாராட்டுக்களையும், கருத்துக்களையும் விஜய், சூர்யாவிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றதற்காக விஜய்க்கு சூர்யா வாழ்த்து கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு பர்ஷனல் சந்திப்பு என்பதால், இருவரும் புகைப்படங்கள் எதையும் எடுத்துக் கொள்ளவில்லையாம். முதற்காரணம் ஒருவேளை புகைப்படம் வெளியானால் தேவையில்லாமல் சோசியல் மீடியாவில் வைரலாகும் என்பதாலும், மற்றொரு காரணம் இருவருமே தத்தமது படத்திற்காக போட்டுள்ள கெட்டப் வெளியே தெரியக்கூடாது என நினைத்ததாலும் தான் போட்டோ எடுப்பதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.