நடிகர் சூர்யா வீட்டிற்கு வந்த பார்வதி அம்மா…காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

Suriya

காவல்துறையின் அராஜகத்தால் உயிரிழந்த ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நடிகர் சூர்யா இன்று 15 லட்சம் ரூபாய் வைப்பு நிதிக்கான காசோலையை வழங்கினார்.

இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துரு வேடத்தில் நடித்து வெளியாகியுள்ள படம் ஜெய்பீம், இந்தப் படம் பழங்குடியின சமூக மக்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பழங்குடியின மக்கள் மீது அதிகாரத்தின் வெறி ஆட்டத்தை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளதால் ஜெய்பீம் படத்திற்கு வரவேற்பு குவிந்து வருகிறது.

இந்த படத்தில் செங்கேணி கதாபாத்திரமாக சித்தரிக்கப்படும் பார்வதி அம்மா தற்போது வறுமையில் வாடி வருகிறார். அவருக்கும் அவரது கணவருக்கும் நேர்ந்த அவலத்தை வெளிச்சம் போட்டு காட்டிய நடிகர் சூர்யா, பொருளாதார ரீதியாகவும் அவருக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த சூர்யா, பார்வதி அம்மாவுக்கு ரூ.10 லட்சம் டெபாசிட் செய்து அதில் இருந்து வரும் வட்டியை அவர் பயன்படுத்திக்கொள்ளும் படி செய்ய உள்ளதாகவும், பழங்குடியின குழந்தைகளின் கல்விக்கு உதவுவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதற்கான டெபாசிட் காசோலையை இன்று பார்வதி அம்மாளிடம் நடிகர் சூர்யா வழங்கினார். சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சூர்யாவின் இல்லத்திற்கு பார்வதி தனது குடும்பத்தினருடன் வருகை புரிந்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன, ராஜாக்கண்ணு வழக்கில் ஆரம்பத்திலிருந்து போராடி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோவிந்தன், உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

2 டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் 5 லட்சம் ரூபாயும், சூர்யா தனிப்பட்ட முறையில் 10 லட்சம் ரூபாய் வைப்பு நிதியும் வழங்கி உள்ளார். வைப்பு நிதியில் வரும் வட்டி பணத்தை பார்வதி மாதம் மாதம் எடுத்துக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பிறகு அந்த தொகையை அவரது குடும்பத்தினர் பிரித்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *