உங்களுக்கு இவ்ளோ தான் சம்பளம்… ஹெச்1பி விசா உடையவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கிய எச்.சி.எல் நிறுவனம்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் நிறுவனம் மற்ற நிறுவனங்களைப் போல அமெரிக்கா போன்ற நாடுகளில் கிளை நிறுவனத்தை இயக்கி வருகிறது. இந்நிலையில் ஹெச்1பி விசா கீழ் பணியில் அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு அளிக்கப்படும் அதே சம்பளத்தைத் தான் அளிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு உள்ளது.இதை முறையாகப் பின்பற்றாமல் ஹெச்சிஎல் நிறுவனம் ஹெச்1பி விசா கீழ் இருக்கும் திறன் வாய்ந்த ஊழியர்களுக்குக் குறைவான சம்பளத்தைக் கொடுத்து ஏமாற்றியுள்ளது என எக்னாமிக் பாலிசி இன்ஸ்டியூட் (EPI) அமைப்பு நிறுவன தரவுகளை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹெச்1பி விசா மூலம் திறன் வாய்ந்த ஊழியர்களைப் பணியில் அமர்த்தி விட்டு அமெரிக்கர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்திற்கு இணையாகக் கொடுக்காமல் குறைவான சம்பளத்தை ஹெச்சிஎல் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு அளித்து வருகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்து வழக்கும் தொடுக்கப்பட்டது.இந்த வழக்கின் ஒரு பகுதியாகத் தற்போது எக்னாமிக் பாலிசி இன்ஸ்டியூட் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதில் முக்கியமானது என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் அதிகப்படியான ஹெச்1பி விசாக்களை பெறும் டாப் ஐடி நிறுவனங்களில் ஹெச்சிஎல் நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.ஹெச்சிஎல் நிறுவனத்தின் கீழ் பல ஆயிரம் டெக் ஊழியர்கள் சப்கான்டிராக்ட் மூலம் டிஸ்னி, பெட்எக்ஸ், கூகுள் எனப் பல நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுப்பதன் மூலம் சுமார் 95 மில்லியன் டாலர் அளவிலான தொகை ஹெச்சிஎல் சேமித்துள்ளது என ரான் ஹிரா, டேனியல் கோஸ்டா ஆகியோர் இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.