டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன? அது எதற்கு பயன்படுகிறது??

இந்திய அரசு சார்பில் டிஜிட்டல் நாணயம் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது எனும் அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் கவனத்தை ஈர்த்திருக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயமாக டிஜிட்டல் ரூபாய் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிரிப்டோ நாணயங்கள் பரவலாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவற்றின் மீதான வருமானத்திற்கு வரி விதிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், டிஜிட்டல் ரூபாய் தொடர்பான ஆர்வம் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் ரூபாய் செயல்படும் விதம் உள்ளிட்ட மிக்கிய அம்சங்களை பார்க்கலாம்.டிஜிட்டல் பணம்: டிஜிட்டல் ரூபாய், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமாக (சி.பி.டி.சி., ) அமையும்.
இது காகித வடிவில் அல்லாமல் மின்னணு வடிவிலான அரசின் இறையாண்மை கொண்ட நாணயமாக விளங்கும். இது ரூபாயுடன் மாற்றக்கூடியதாக இருக்கும். தங்கம் அல்லது இதர இருப்பை அடிப்படையாக கொண்டிருக்கலாம்.அடிப்படை நுட்பம்: மின்னணு பணப் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான பிளாக்செயின் நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் அமைந்திருக்கும். இதற்கான பிளாக்செயின் வலைப்பின்னல் அரசால் சொந்தமாக உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட தேவைக்கேற்ப இது அமையும்.என்ன வேறுபாடு: பிட்காயின் உள்ளிட்ட எண்ணற்ற கிரிப்டோ நாணயங்கள் போன்றதே டிஜிட்டல் ரூபாய் என்றாலும், அரசின் ஆதரவோடு மத்திய வங்கியால் வெளியிடப்படுவது இதன் பலமாகும். இதன் மதிப்பிலும் பெரிய அளவில் ஏற்றத்தாழ்வு இருக்காது. மின்னணு வடிவில் எளிதாக கையாளலாம்.பரிவர்த்தனைகள் பாதுகாப்பாகவும் இருக்கும்.சாதகம் என்ன? டிஜிட்டல் ரூபாய் பல்வேறு சாதகங்களை கொண்டிருக்கும் என கருதப்படுகிறது.
நிகழ் நேர பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும். சர்வதேச அளவில் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ளலாம். நேரடி மானியங்கள் போன்றவற்றுக்கும், நிதி அமைப்புகள் வேகமாக கடன் வழங்கவும் வழிவகுக்கும்.உலக நாடுகள்: சர்வதேச அளவில், 80 க்கும் மேற்பட்ட நாடுகள் டிஜிட்டல் நாணயம் வெளியிடுவதை பரிசீலித்து வருகின்றன. இவற்றில் பஹாமாஸ், நைஜீரியா உள்ளிட்ட 9 நாடுகள் ஏற்கனவே தங்கள் டிஜிட்டல் நாணயத்தை வெளியிட்டுள்ளன. சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் முன்னோட்ட அடிப்படையில் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.