சுவையான பன்னீர் பாப்கார்ன் ..!
இந்திய சீஸ் வகைகளில் ஒன்றான பன்னீர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்து வருகிறது. பால் வகையை சேர்ந்த பன்னீர் சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட.
பன்னீரில் கால்சியம் புரதச்சத்துக்கள் தவிர ஏராளமான ஊட்டச் சத்துக்களும் நிறைந்து உள்ளது.மேலும் இதில் செலினியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் உதவும்.
இதை வைத்து செய்யப்படும் பன்னீர் பாப்கார்ன் குழந்தைகளுக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று. இதற்கு தேவையான பொருட்கள் பன்னீர்,மைதா, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள்,கரம் மசாலா, மிளகு தூள், ரொட்டி தூள், எண்ணெய் மற்றும் உப்பு.
முதலில் பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ரொட்டி தூள், உப்பு மற்றும் மிளகாய் சேர்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் மைதா சேர்த்து அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள்,கரம் மசாலா,மிளகுத்தூள் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி மாவு படத்திற்கு கலக்கி கொள்ளவும். மைதா வேண்டாம் என்று நினைப்பவர்கள் அரிசி மாவு அல்லது கடலை மாவு கூட பயன்படுத்தலாம். இந்த கலவையில் பன்னீரை சேர்த்து கிளறவும்.
பிறகு இந்த கலவையை ரொட்டி தூள் உடன் சேர்த்து 15 நிமிடங்களுக்கு குளிர்பான பெட்டியில் வைத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பன்னீர் பாப்கார்ன் தயார்.