ஆப்கானிஸ்தானுக்கு தடுப்பூசி அனுப்பும் இந்தியா..!
உலக நாடுகள் கொரோனா பரவலுடன் தற்போது ஒமைக்ரான் பரவலையும் சந்தித்து வருகிறது. கொரோனாவை வெல்லும் பேராயுதமாக தடுப்பூசி செலுத்தப்படுவது பார்க்கப்படுகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்ட போதிலும் சில நாடுகள் தடுப்பூசி கிடைக்காமல் தத்தளித்து வருகின்றன.
இந்தியா வாக்ஸின் மைத்ரி என்ற முன்னெடுப்பின் மூலம் இது போன்ற பல நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. அந்த வரிசையில் தலிபான்களின் பிடியில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு 5 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது இந்தியா.
கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு புத்தாண்டின் முதல் நாளில் இந்த 5 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது. இந்தியா தடுப்பூசி அனுப்பியது குறித்து ட்விட்டரில் இந்தியாவுக்கான ஆப்கான் தூதர் பரித் மமுன்ட்சி பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் இந்தியாவின் இந்த உதவிக்கு ஆப்கானிஸ்தான் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அறிவித்தார்.