மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சாளர்களை கதறவிட்ட இளம் இந்திய வீரர்கள்..!
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேச ஐயர் ஆகியோரின் அதிரடியால் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் குவித்துள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்டு பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். கெய்க்வாட் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நிதானமாக விளையாடியது. இருப்பினும் இஷான் கிஷன் 34 ரன்களிலும், ஸ்ரேயஸ் ஐயர் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதன் மூலம் இந்திய அணி 100 ரன்களுக்கு உள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த இந்திய அணியின் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேச ஐயர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களை பறக்கவிட்டது. அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 19 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.
இந்த இளம் ஜோடியின் அதிரடியால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருவது குறிப்பிடதக்கது.