T20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களம் இறங்கினர். இஷான் கிஷன் 2 ரன்களிலும், 19 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அதிரடியாக விளையாடிய விராட் கோலி 41 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். அதேபோல இளம் வீரர் ரிஷப் பண்ட் வெறும் 28 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார். அவர் 28 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். இறுதியில் வெங்கடேஷ் ஐயர் சிறிது அதிரடி காட்ட இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிங் மற்றும் மேயர்ஸ் களமிறங்கினர். கிங் 22 ரன்களிலும், மேயர்ஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் பௌவல் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு பயத்தை ஏற்படுத்தியது. அதிரடியாக ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வது போல் இருந்த போதிலும் 8 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் சார்பில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.