பந்துவீச்சை தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி..!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கிரன் பொல்லார்டு பந்து வீச்சினை தேர்வு செய்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் புதிதாக நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ருத்ராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விராட் கோலி, ரிஷப் பண்ட், புவனேஸ்வர் குமார் மற்றும் சவால் ஆகியவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவேஷ் கான் இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்குகிறார். அவருக்கு இந்திய அணியின் தொப்பியை புவனேஸ்வர் குமார் வழங்கினார்.
முதலில் பேட்டிங் செய்வது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியதாவது, நாங்கள் கடந்த இரண்டு போட்டிகளில் வென்றுள்ளோம். இந்த போட்டியில் சில முக்கிய வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். முதலில் பேட்டிங் செய்ய உள்ளோம். கடந்த போட்டியை போன்று இந்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்றார். மேலும், இந்த போட்டியில் இஷான் கிஷன் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக களம் இறங்க உள்ளனர் என்றார்.