இப்படி விளையாடுனா சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காது… பாகிஸ்தான் வீரர் கருத்து..!
இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. அது ஆடும் லெவனில் யார் இடம் பிடிப்பது என்ற போட்டியை அதிகப்படுத்தியுள்ளது. ஷ்ரேயஸ் ஐயர், தீபக் ஹூடா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் என அனைவருமே தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இந்திய அணியில் தனக்கென நிரந்தர இடத்தை பிடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பாக ஷாட் ஆடுகிறார். இருந்தாலும் 18, 19, 20 மற்றும் 30 என அவர் எடுக்கும் ரன்கள் அணியில் நிரந்தர இடம் பிடிக்க போதவே போதாது. அவருக்கு அசாத்தியமான திறன் இருப்பது உண்மை. இருந்தாலும் அதை அவர் வெளிக்கொணர தவறிவிடுகிறார். இந்திய அணியில் தற்போது வாய்ப்புக்காக பல வீரர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அதனால் அணியில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்த அவரது ஆட்டத்தின் வெளிப்பாடு மேலும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என பட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது இந்த ஆண்டு நடக்க இருக்கும் உலகக் கோப்பையை வெல்ல சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுவது குறிப்பிடதக்கது.