பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புதிய சாதனை..!
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணி போராடி டிரா செய்துள்ளது. இருப்பினும், இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்து 4 ரன்களில் இரட்டை சதத்தை தவற விட்டார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் .
முன்னதாக டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 556 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, 148 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 408 ரன்கள் என்ற பெரும் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 97 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்தது. மேலும், பாகிஸ்தானுக்கு 505 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
505 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது பாகிஸ்தான் அணி. அந்த அணி தோல்வியைத் தழுவி விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கேப்டன் சிறப்பாக விளையாடி அணியின் தோல்வியை தவிர்த்தார். ஒற்றை நபராக கேப்டன் பாபர் அசாம் அணியை தூக்கி நிறுத்தினார். 425 பந்துகளை சந்தித்த அவர் 21 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 196 ரன்களை குவித்தார். இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்து 4 ரன்களில் இரட்டை சதத்தை தவற விட்டார்.
இந்த இன்னிங்ஸின் மூலம் பாபர் அசாம் உலக சாதனையை படைத்துள்ளார். அதாவது கேப்டானாக ஒருவர் நான்காவது இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பாக நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள் வரிசையில் டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, விராட் கோலி உள்ளிட்டோர் இருந்தனர். அதை தற்போது பாபர் அசாம் முறியடித்துள்ளார்.