காபி டே-வை மீட்டு கொண்டு வந்த மாளவிகா ஹெக்டே
கணவனை இழந்த மனைவிமார்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பது என்பதெல்லாம் அந்த காலம் என்பதை சுட்டிக்காட்ட தற்போது பல பெண்கள் இருக்கிறார்கள். எவரது தயவும் இன்றி, பெண்கள் தங்களது படிப்பையும், அதன் மூலம் பெற்ற அறிவையும் , திறமையையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறும் நிகழ்வு தற்காலத்தில் அதிகரித்துக்கொண்டே போகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் பெண்கள் அடிமைகளாக இருந்து வந்ததை முன்னமே எதிர்த்து இருந்தால், தற்போது ஆண் உயர்வா, பெண் உயர்வா என்ற கேள்வி எழாமலே போயிருக்கும். இப்படி வளர்ந்து வரும் பெண் சாதனையாளர்கள் பட்டியலில் தற்போது காபி டே நிறுவனத்தின் தலைவராக இருக்கும் மாளவிகா ஹெக்டே சேர்ந்துள்ளார்.
2019-ல் காபி டே சிஇஓ சித்தார்த் மங்களூர் அருகே நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இவரின் தற்கொலைக்குப் பிறகு காபி டே நிறுவனம் முழுவதும் இயங்காது என்று செய்தி வெளியானது . இந்த செய்தி உண்மையாக கூட வாய்ப்பு இருந்தது .ஏனென்றால் காபிடே நிறுவனப்பங்குங்கள் 270 ரூபாயில் 12 ரூபாய்க்கு வர்த்தகமாயின.
ஒரு சிறு நிறுவனமாக இருந்தால் கூட அதை உடனே மூடிவிட்டு சென்றிருக்கலாம் . ஆனால் இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் காபி ஷாப்களை நடத்தி வருகிறது. இது இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனமாகவும் மக்களாலும் கொண்டாடப்பட்டு வந்தது. ஸ்டார்பக்ஸ், பாரிஸ்டா மற்றும் கோகோ கோலா கோ-சொந்தமான கோஸ்டா காபி போன்றவற்றுக்கு கடுமையான போட்டியாளராக சித்தார்த்தின் கஃபே காபி டே நிறுவனம் வளர்ந்தது.இப்படி வளர்ந்த நிறுவனத்தை எப்படி பாதி வழியிலே விட்டுட்டு போக முடியும்.அந்த நேரத்தில் தான் சித்தார்த்த மனைவியான மாளவிகா ஹெக்டே காபி டே நிறுவனத்திற்கு புது சிஇஓ வாக பதவி ஏற்றார்.
காபி டேவை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர் இருக்கிறார்கள்.. அவர்களை காப்பாற்ற வேண்டியது எனது கடமை என்று மாளவிகா ஹெக்டே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் காபி டே நிறுவனத்தின் கடன்களை நிறுவனம் நிச்சயம் திரும்பச் செலுத்தும் என தெரிவித்தார். அவர் தனது வார்த்தையைக் காப்பாற்றினார். நிறுவனத்தின் கடன் பாதியாக குறைந்தது. 7,200 கோடியில் இருந்து ரூ.3,100 கோடி ரூபாயாக கடன் குறைந்திருக்கிறது. இது மாளவிகா ஏற்படுத்திய மாற்றம். ஊழியர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது. நிறுவனத்தின் கடினமான காலங்களில் ஊழியர்கள் ஆர்வமாக இருந்ததாகவும், வங்கிகள் பொறுமையாக காத்திருந்ததாகவும் மாளவிகா தெரிவித்தார்.
இதனால் காபி டே பங்கின் விலை 54 ரூபாய். ஊடகங்கள் அவரை ராஜமாதா என்று புகழ்கின்றனர். இரும்புப் பெண்மணி என்று முதலீட்டாளர்கள் சொல்கிறார்கள். சாதித்துக் காட்டுவதற்கு ஆண், பெண் என்ற பாலின வேறுபாடு தேவையில்லை. எந்த ஆதரவும், துணையும் தேவையில்லை. அதற்கு மாளவிகா ஹெக்டே ஒரு முன்னுதாரணம்.