பாஜகவை நம்பாதீங்க, அகிலேஷ்க்கு வாக்களியுங்கள்… தேர்தல் களத்தில் மம்தா..!
இந்த ஆண்டு உத்திரப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவை ஆதரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் யாதவுக்கு வாக்களியுங்கள். பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் யாரும் ஏமாந்து விடாதீர்கள் என தெரிவித்தார். இன்று லக்னோவில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இதனை அவர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மக்கள் எதையும் மறந்து விடவில்லை. உன்னாவ் மற்றும் ஹாத்ராஸ் சம்பவங்கள் மற்றும் கொரோனா பரவலின் போது புனித கங்கையில் இறந்தவர்களின் உடல்கள் வீசப்பட்டது போன்ற எதையும் மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். இத்தனை சம்பவங்களும் நடைபெறும்போது மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்கே இருந்தார் எனவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.