சொத்துக்காக தாயும், மகனும் இப்படியா செய்வாங்க..!

மும்பையில் மகனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மும்பையின் புறநகர் பகுதியான அம்போலி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தனு கிருஷ்ணா. இவர் தனது மனைவி கீதா மற்றும் மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக சாந்தனுவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு சாந்தனுவின் மனைவி கீதா, காவல் நிலையத்திற்கு போன் செய்து, தனது கணவர் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கீதா முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆகவே, கீதாவையும், அவரது மகன் ராகுலையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், தாங்கள் இருவரும் சேர்ந்து தான் சாந்தனுவை கொலை செய்து 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். சொத்து தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, தாயையும், மகனையும் போலீஸார் கைது செய்தனர்.
சொத்து பிரச்சினையில் கணவனை மனைவியும், மகனும் இணைந்து கொலை செய்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.