நான் தீவிரவாதி அல்ல… பஞ்சாப் முதல்வர் கொந்தளிப்பு..!
பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நான் தீவிரவாதி அல்ல என தெரிவித்துள்ளார். அவரது ஹெலிகாப்டர் ஜலந்தர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஹோஷியர்பூர் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக பஞ்சாப் முதல்வர் ஹெலிகாப்டர் பயணத்திற்கு அனுமதி கோரியிருந்தார். ஆனால், அவருக்கு பிரதமரின் தேர்தல் பொதுக்கூட்டம் ஊர்வலம் இருப்பதால் அந்த வழியாக ஹெலிகாப்டர் போக்குவரத்தை அனுமதிக்க முடியாது என கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பஞ்சாப் முதல்வர் கடும் அதிருப்தி அடைந்தார்.
இதனையடுத்து அவர் கூறியிருப்பதாவது, நான் 11 மணி அளவில் உனாவில் இருந்தேன். திடீரென எனது ஹெலிகாப்டர் பயணத்திற்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பிரதமரின் பயணம் காரணமாக எனக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்களது ஆட்சியில் பஞ்சாப் பாதுகாப்பாக இருக்கிறது. நான் ஒன்றும் தீவிரவாதி அல்ல என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த திடீர் உத்தரவால் நான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையிலான பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இப்படி செய்வது முறையல்ல என அவர் பேசினார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.