உத்தரபிரதேச வளர்ச்சிக்காக பாடுபடுவோம்… உள்துறை அமைச்சர் பேச்சு..!
உத்தரப்பிரதேசம் இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலமாக திகழ பாஜக தீவிரமான நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். லக்னோவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார்.
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் பேசியதாவது, 2014க்குப் பிறகு, உத்தரப்பிரதேசத்தை முன்னேற்ற பிரதமர் மோடி பல முயற்சிகளை மேற்கொண்டார், ஆனால் அந்த முயற்சிகளுக்கு சமாஜ்வாதி அரசு பெரும் தடையாக இருந்தது. மோடிஜி எந்தத் திட்டத்தை அனுப்பினாலும், சமாஜ்வாதி அரசு அதை ஒரு குறிப்பிட்ட சாதி மற்றும் வகுப்பினருக்கு மட்டுமே கொண்டு சேர்த்தது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே வெளிப்படையாக ஆட்சி நிர்வாகம் நடத்தப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் வெளிப்படையான ஆட்சியை வழங்கி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது பாஜக.
அரசியலமைப்பு நம்மை உணர்திறன் கொண்டவர்களாக இருக்கக் கற்றுக்கொடுக்கிறது. ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அரசாங்கம் இருக்க வேண்டும். அரசாங்கம் வளர்ச்சிப் பணிகளின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், விருப்பு வெறுப்பு அல்லது தனிப்பட்ட உறவுகளால் அல்ல.
கல்வியிலும் வளர்ச்சியிலும் உத்தரப்பிரதேசம் மாநிலம் மேம்படுத்தப்படும். ஒரு குடும்பம் அல்லது ஒரு குறிப்பிட்ட சாதியினரால் ஒரு மாநில அரசு நடத்தப்படும் போது ஒட்டுமொத்த மக்களும் துன்புறுகிறார்கள். அரசு அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியைக் குறிக்கோளாக கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இன்று மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.