அமைதிப் பேச்சுவார்த்தையை வலியுறுத்தும் பிரதமர்..!

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த சில தினங்களாக போர் நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். உக்ரைனும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனில் போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என குவாட் தலைவர்கள் மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷ இடா ஆகியோருடன் காணொளி வாயிலாக நடந்த குவாட் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி ஆகியவை தான் குவாட் அமைப்பின் முக்கிய குறிக்கோள். எனவே அதனை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அந்தவகையில் மனிதாபிமான நடவடிக்கைள், பேரிடர் நிவாரணம், தூய்மையான எரிசக்தி ஆற்றல், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் குவாட் அமைப்பின் யதார்த்தமான மற்றும் உறுதியான கூட்டுறவு அவசியம் என வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது அதுதொடர்பாக பேசிய பிரதமர் மோடி, அமைதியான மற்றும் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு திரும்புவது தான் போரை நிறுத்த வழிவகுக்கும் என அறிவுறுத்தினார்.