பஞ்சாபில் பதவியேற்கும் புதிய அமைச்சரவை..!
இந்த ஆண்டு உத்திரபிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் கடந்த மார்ச் 10 அன்று வெளியாகின. தேர்தலை சந்தித்து உள்ள மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், இன்று பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மான் அமைச்சரவையில் ஒரு பெண் உள்பட 10 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.சண்டிகரில் உள்ள பஞ்சாப் பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பும் செய்துவைத்தார்.
பஞ்சாபில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட 10 பேரில், எட்டு பேர் முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அனைவரும் பஞ்சாபி மொழியிலேயே உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சரவையில் இடம் பெற்றவர்களில் டாக்டர் பல்ஜித் கவுர் மட்டுமே பெண். பஞ்சாப் அமைச்சரவையில் முதல்வர் உள்பட 18 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.