அரசியல் குழப்பத்திற்கு அதிரடியாக நடவடிக்கை எடுத்த பாஜக..!

இந்தியாவின் உத்தரப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த தேர்தலில் 5 மாநிலங்களில் போட்டியிட்ட பாஜக நான்கு மாநிலங்களில் வெற்றி வாகை சூடியது. இருப்பினும், உத்தரப்பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களுக்கு முதல்வர் யார் என முடிவு செய்வதில் குழப்பமான சூழல் நீடித்து வந்தது. இந்நிலையில், மாநிலங்களுக்கான முதல்வர்களின் பெயர்களை அதிரடியாக அறிவித்து குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது பாஜக.

உத்தரகண்டில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அங்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 47 தொகுதிகளை பாஜக கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இருப்பினும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட புஷ்கர் சிங் தாமி, தான் போட்டியிட்ட கட்டிமா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதனால் முதல்வர் பதவியை புஷ்கர் சிங் தாமிக்கு வழங்குவது தொடர்பாக பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வந்தது. இதனிடையே, முதல்வர் பதவிக்கும் மேலும் சில தலைவர்கள் போட்டியிட்டதால் அங்கு குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், உத்தராகண்டில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ-க்களிடம் இந்த விவகாரம் தொடர்பாக கட்சி தலைமை இன்று ஆலோசனை நடத்தியது. இதில் பல எம்எல்ஏக்கள் புஷ்கர் சிங் தாமி முதல்வராக வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். மேலும், அவருக்காக தங்கள் தொகுதிகளை காலி செய்யவும் பெரும்பாலான எம்எல்ஏக்கள் முன்வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, புஷ்கர் சிங் தாமியை உத்தராகண்ட் முதல்வராக பாஜக தலைமை அறிவித்துள்ளது. அவர் விரைவில் முதல்வராக பதவியேற்பார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும், புஷ்கர் சிங் தாமி தேர்தலில் தோல்வி அடைந்ததால், முதல்வராக பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள்ளாக ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதேபோல, கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற போதிலும், அங்கு முதல்வர் பதவிக்கு பிரமோத் சாவந்துக்கும், எம்எல்ஏ விஷ்வஜி ராணேவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. ஏற்கனவே, முதல்வராக இருந்த பிரமோத் சாவந்த் தான், தற்போதைய தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு கடுமையாக பணியாற்றி வந்ததாக கட்சி தலைமையிடம் கோவாவின் புதிய எம்எல்ஏ-க்கள் தெரிவித்து வந்தனர். ஷபாஸ் மேலும், பிரமோத்துக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவும் பக்கபலமாக இருந்தது. இதையடுத்து, அவரையே கோவா முதல்வராக தேர்வு செய்து பாஜக தலைமை இன்று அறிவித்தது.

உத்தரகண்ட் மற்றும் கோவா ஆகிய இரு மாநிலங்களுக்கும் முதல்வர்களை அறிவித்துள்ளதன் மூலம் பல நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *