இஸ்லாமியர் பிரதமரானால் என்ன நடக்கும் தெரியுமா..? மதத் தலைவர் சர்ச்சைப் பேச்சு..!
இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் இந்து மதத் தலைவர் யதி நரசிங்கானந்த் பேசியுள்ளார். அவர் மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் நேற்று ‘இந்து மகாபஞ்சாயத்’ என்ற பெயரில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் இந்து மதத் தலைவர் யதி நரசிங்கானந்த் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, வருங்காலத்தில் இஸ்லாமியர் ஒருவர் இந்திய பிரதமராக பதவியேற்கக் கூடும். அப்படி இஸ்லாமியர் பிரதமரானால், 50 சதவீத இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுவார்கள். 40 சதவீதம் பேர் கொல்லப்படுவார்கள். மீதமுள்ள 10 சதவீதத்தினர் உள்நாட்டில் அகதிகள் முகாமிலோ அல்லது வெளிநாட்டிலோ தஞ்சம் அடைய நேரிடும். இந்த மோசமான நிலைமை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், இந்துக்கள் இப்போதே ஆயுதம் ஏந்த வேண்டும் எனக் கூறினார்.
அவரது வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான இந்த பேச்சு சமூக வலைதளங்களில் தீயாய் பரவி சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, யதி நரசிங்கானந்த் மீது வெறுப்புணர்வை ஊட்டும் வகையில் பேசுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல, இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையிலும் அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யதி நரசிங்கானந்த் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், இதுபோன்ற சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டார். பின்னர், சில வாரங்கள் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.