அதிர்ந்து போன டிடிவி… ஸ்டாலினிடம் கேட்கும் 6 கேள்விகள்!

TTV

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் உரிமை விட்டுக்கொடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றன. இதனைக் கண்டித்து அதிமுக சார்பில் 5 மாவட்டத்தில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 6 கேள்விகளை எழுப்பியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மவுனம் கலைத்து பதில் சொல்வாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் உரிமையைத் தி.மு.க அரசு கேரளாவிடம் பறிகொடுத்துவிட்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உரிய விளக்கம் வேண்டுமென வலியுறுத்துகிறேன். அளிக்க

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழ்நாட்டின் உரிமைகளை சுயலாபத்திற்காகவோ, துணிவின்மையாலோ காவு கொடுத்துவிடுவார்கள் என்ற கடந்த கால வரலாற்றை முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்திற்குச் சென்று போராடி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று தீர்ப்பைப் பெற்றுத் தந்து, அதன்படியே அணையில் தண்ணீரையும் தேக்கிக் காட்டியவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

ஆனால், தற்போது நீர்மட்டம் 138 அடியைத் தாண்டியவுடனேயே கேரள அமைச்சர்களும், அம்மாநில அதிகாரிகளும் தமிழக அரசுக்கு தெரியாமலேயே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கோளாவுக்கு தண்ணீரை திறந்துவிட்டதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

இதன்மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் திரு.ஸ்டாலின் மவுனம் சாதிப்பது ஏன்?

1) தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அதிகாரிகள் அவர்களுடைய மாநிலத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டது எப்படி? இதன் மூலம் அணை கட்டப்பட்டதில் இருந்து 126 ஆண்டுகளாக தமிழ்நாட்டிடம் இருந்த உரிமை பறிபோய்விட்டதா?

2) உச்சநீதிமன்றத்தீர்ப்பின் படி முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்குவதற்கு தி.மு.க அரசுக்கு தடையாக இருப்பது எது?

3) முல்லைப்பெரியாறு அணை குறித்து ஏற்கனவே பல்வேறு பொய் பரப்புரைகளை கேரளா தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலையில், அதற்கு வலு சேர்க்கும் வகையில் தி.மு.க அரசு நடந்துகொள்வது என்?

4) தமிழகத்தின் 5 மாவட்ட மக்களுக்காக கட்டப்பட்ட அணையில் இருந்து அவர்களது பயன்பாட்டுக்கான தண்ணீரை கேரளாவுக்கு திறந்துவிட வேண்டிய அவசியம் என்ன?

5) இதற்கு அனுமதித்த தவறை மூடிமறைக்க முயற்சிப்பதோடு, அதனை நியாயப்படுத்தும் வகையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் பேசுவது தென்மாவட்ட மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் துரோகமில்லையா?

6) தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணைப்பகுதியில் கேரளாவின் நீர்வளம் மற்றும் வேளாண் துறைகளின் அமைச்சர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து முகாமிட்டு ஆய்வு செய்யும் நிலையில், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சரும், வேளாண்துறை அமைச்சரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இதுவரை இவர்கள் அங்கே சென்று ஆய்வு செய்யாதது ஏன்? முதலமைச்சர் உரிய விளக்கமளிப்பாரா? முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமை காப்பாற்றப்படுமா? இல்லை தனது தந்தை கருணாநிதி காலத்தைப் போல தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுத்துவிடுவாரா? இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *