இது எனக்கு புதிதல்ல… கொட்டும் மழையில் பதிலடி கொடுத்த ஸ்டாலின்!

MK Stalin

சென்னையில் வெள்ளத்தால் சூழ்ந்த பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 4வது நாளாக ஆய்வு செய்தார். தியாகராய நகரில் கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், அப்போது தியாகராய நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து, கமிஷன் பெற்று அரைகுறையாக பணிகளை செய்திருக்கிறார்கள். அதனால்தான் தி.நகரில் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு நாட்கள் மழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அதையும் பார்த்துவிட்டு பிறகு ஒன்றிய அரசிடம் நிவாரணம் கோர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், எந்த நோக்கத்தோடு, எந்தக் கொள்கையோடு, எந்த இலட்சியத்தோடு, ஆட்சிக்கு வந்தோமோ அதை நிச்சயமாக, அதே அடிப்படையில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பகுதிகளில் முதலில் முக்கியத்துவம் கொடுத்து, நாங்கள் நிவாரண நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம், தொடர்ந்து பணிகள் நடந்துகொண்டிருக்கிறது எனக்கூறினார்.

கொட்டும் மழையில் ஆய்வு நடத்துவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இது எனக்கு புதிதல்ல. நான் மேயராக இருந்தபோது செய்திருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் செய்திருக்கிறேன், துணை முதலமைச்சராக இருந்தபோதும் செய்திருக்கிறேன், இப்போது முதலமைச்சராக இருந்து செய்கிறேன் எனக்கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், இந்த 10 வருடத்தில் கடந்த ஆட்சியில் எதுவுமே செய்யாத காரணத்தால்தான், நாங்கள் ஆறுமாதமாக, எப்போது ஆட்சிக்கு வந்தோமோ, அதிலிருந்து மழை பெய்து எங்கெங்கெல்லாம் அடைப்பு வரும் என்று எங்களுக்குத் தெரியும், அதையெல்லாம் சரிசெய்து கொண்டிருக்கிறோம். 50 சதவீதம், 60 சதவீதம் நாங்கள் செய்திருக்கிறோம். இன்னும் செய்யவேண்டியிருக்கிறது. அதை நாம் இந்த மழைக்காலம் முடிந்தவுடன் அதையும் செய்து நிரந்தரமாக, சேதாரம் இல்லாத சென்னையாக மாற்றுவோம் என உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *