பேரு வச்சீங்களே… சோறு வச்சீங்களா?… எடப்பாடிக்கு நெத்தியடி பதில் கொடுத்த திமுக அமைச்சர்!
அதிமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு திமுக தற்போது சொந்தம் கொண்டாடி வருவதாக எடப்பாடி பழனிசாமி நேற்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அடுத்தவர்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடாமல்”, எதையும் தாங்கள் தான் செய்தோம் என்று விளம்பரப்படுத்தும் மோகத்தில் இருந்து விடுபட்டு, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு தனது சொந்த செயல் திட்டங்களை வகுத்து, அவற்றினை நிறைவேற்றிட வேண்டும்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த கடும் விமர்சனத்திற்கு தற்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சரியான பதிலடி கொடுத்துள்ளார். இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கம் தென்னரசு பேசியதாவது: கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையம் கருணாநிதி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் அதை அதிமுக ஆட்சியில் திறந்துவைத்துவிட்டது, கருணாநிதி பெயர் இருந்த கல்வெட்டை நீக்கினார்கள். புதிய தலைமைச் செயலக கட்டிடம் திமுக ஆட்சியில் தான் கட்டப்பட்டது. அதிலே ஓமந்தூரார் மருத்துவமனை என போட்டு ஏதோ உலக பெரிய மருத்துவமனையை தாங்களே கட்டியது போல் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது அதிமுக.
தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவக்கல்லூரிகள் தங்களது ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டிலேயே மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்த போது 10 அரசு கலைக்கல்லூரிக்கான அரசாணையை வெளியிட்டார்கள். அதற்கான பணிகள் நிறைவடைவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்தது ஏதோ அவர்களே கொண்டு வந்தது போல், அத்திட்டத்தின் மீதும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டார்கள்.
ஸ்டிக்கர் ஒட்டும் கலாச்சாரம் என்பது அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. நீங்கள் பெற்ற பிள்ளைகளை நீங்கள் பேணி பாதுகாத்திருக்க வேண்டும். நீங்கள் பெத்த பிள்ளைகளுக்கு பேரு வச்சிங்கீங்களே… சோறு வச்சீங்களா? என அதிமுகவை விமர்சித்தார். அதிமுகவின் திட்டங்களுக்கு எங்களுடைய பெயரை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திமுக என்பது ஒரு ஆலமரம், ஆனால் அதிமுக என்பது என்பது காந்தாரி மணமாக இருக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்தார்.