வெளிய போறதுக்கு இவ்வளவு பில்டப் வேணாம்… நயினாரை கலாய்த்த அப்பாவு!
நீட் விலக்கு மசோதா தொடர்பான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை சபாநாயகர் அப்பாவும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் மாறி, மாறி கலாய்ந்துள்ளனர்.
நீட் விலக்கு மசோதா தொடர்பான சிறப்பு சட்டமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் நீட் தேர்வை எதிர்ப்பதாக கூறினார். நீட் தேர்வினால் ஏழை எளிய மாணவ மாணவிக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளதாகவும், ஆளுநர் செயல்படாமல் நீட் விளக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தவறு என்றும் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
பாஜக மாநில துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் பேசினர். கடந்த முறை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது, பாஜக அதில் பங்கேற்கவில்லை என்பதை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்றத்திற்குள் இருந்த உறுப்பினர்களின் ஆதரவை வைத்தே மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இப்போது நீங்கள் வெளியே போனாலும், மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
மீண்டும் மா.சுப்பிரமணியன் கூறியது தொடர்பாக பேசத்தொடங்கிய நயினார் நாகேந்திரனை இடைமறித்த சபாநாயகர் அப்பாவு, ‘வெளியே போறதுக்கு இவ்வளவு பில்டப் செய்ய வேண்டாம், போவதாக இருந்தால் போய்விடுங்கள். இன்னும் நிறைய பேர் பேச வேண்டியிருக்கிறது என சிரித்தபடியே கலாய்த்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.