இதுக்கு நீங்க வெளிநடப்பே செஞ்சியிருக்கலாம்… இபிஎஸ் – ஓபிஎஸ் செயலால் கடுப்பான அப்பாவு!
சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலுக்கு முன் பேச அனுமதி கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு 2022 – 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் நிதி நிலை அறிக்கையை வாசிக்க ஆரம்பித்ததும், அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட்டிற்கு முன்னதாகவே தங்களை பேச அனுமதிக்க கோரி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களின் செயலை சபாநாயகர் அப்பாவு கண்டித்தார். எனது அனுமதியின்றி எதிர்க்கட்சியினர் பேசியது அவைக்குறிப்பில் ஏறாது என தெரிவித்துக்கொள்கிறேன். கருத்துக்களை தாராளமாக நிதி நிலை அறிக்கையில் பதிவு செய்யலாம். இன்றைக்கு வரவு, செலவு கணக்கு மட்டுமே பதிவு செய்யப்படும் என இருவருக்குமே நன்றாக தெரியும். எதிக்கட்சி தலைவர், துணைத்தலைவர் இருவருமே முதலமைச்சராக இருந்தவர்கள், இந்த அவையை வழிநடத்தியவர்கள். சபாநாயகர் இருக்கையில் அமரச்சொன்னால் அமர வேண்டும், இல்லையெல் வெளிநடப்பாவது செய்திருக்க வேண்டும். அவை விதிமுறைகளை எல்லாம் மீறி கூச்சல், குழப்பம் ஏற்படுவது நியாயமா? என சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.