தமிழ்நாட்டிற்கான ரூ.28 ஆயிரம் கோடியின் நிலை என்ன?… அண்ணாமலையை அலறவிட்ட பிடிஆர்!
மத்திய அரசு கொடுக்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி நிலுவைத்தொகையும் வழங்கப்பட்டு விட்டதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததற்கு நிதி அமைச்சர் பிடிஆர் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் திமுக அரசு தாக்கல் செய்த 2022 -2023ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து, தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, செய்தித் தொடர்பாளர் நாராயண் திருப்பதி, நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டினார். மத்திய அரசு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை கொடுக்கவில்லை என மாநில நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக குற்றச்சாட்டினார். 6 ஆயிரம் கோடி ரூபாய் தான் அனைத்து மாநிலங்களில் நிலுவைத் தொகையாக இருந்ததாகவும், அதனை தமிழ்நாடு முழுமையாக பெற்றுக்கொண்டு, வெளியே சொல்லவில்லை என குற்றச்சாட்டிய அவர், மத்திய அரசு 16 ஆயிரம் கோடி தர வேண்டுமென என கடந்த 10 மாதங்களாக திமுக அரசு பொய் சொல்லி வருவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முதலில் அவரை பட்ஜெட் ஆவணங்களை முழுமையாக படிக்கச் சொல்லுங்கள். தகுதியற்ற நபர்கள் பொது இடங்களில் தெரிவிக்கும் தவறான தகவல்களுக்கு பதிலளிக்கும் வேலையில் நானில்லை.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நான் டெல்லி சென்றேன். அங்கு மத்திய நிதியமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளரிடம் பட்ஜெட் தொடர்பாக ஆலோசித்தேன். கணக்கு வழக்குகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினேன். அந்த பேச்சுவார்த்தையின்போது யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்துக்கு வந்துவிட்டோம். அதன்படி பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் தமிழ்நாடுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.28,000 கோடி” என அவர் கூறினார்.