எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கல்..? தீவிர ஆய்வில் ஒரு நபர் கமிஷன் !!

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்ததாக புகார் வந்ததின் அடிப்படையில் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அமைத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையம் திட்டங்களை ஆய்வு செய்திருக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி போன்ற நகரங்களில் 30% முதல் 60% விழுக்காடு நிறைவடைந்து இருக்கும் நிலையில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்து இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.

குறிப்பாக கோவையில் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மூலம் அவரது உறவினர்கள் மற்றும் தொழில் பார்ட்னர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டு ஆதாயம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவிகா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களில் அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை ஆய்வு செய்துவரும் ஆணையம் திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் ஆய்வு நடத்தியது.

இதனிடையே பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளில் எஸ்.பி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஆணையத்தின் விசாரணை மேலும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *