ரூ.175 கோடி வசூல்… அறநிலையத்துறையின் நவீன திட்டத்தால் அசத்தல்!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கனிணி வழி வாடகை வசூல் மையங்கள் தொடங்கப்பட்டு இதுவரை ரூபாய் 175 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.

கடந்த 08.10.2021 அன்று கணினி வழியாக கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. 01.11.2021 அன்று முதல் இணைய வழி மூலம் ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அசையாச் சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை / குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பசலி ஆண்டான 1431, 01.07.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பசலி ஆண்டு 30.06.2022 அன்று முடிவடைகிறது.

இந்த பசலியில் துறையிள் நடவடிக்கையால் 01.07.2021 முதல் நாளது தேதி வரை ரூ.175 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மண்டல வாரியாக, இணை ஆணையர் சென்னை 1 ரூ. 26.68 கோடியும், இணை ஆணையர் சென்னை 2 ரூ.21.21 கோடியும், இணை ஆணையர் திருச்சிராப்பள்ளி ரூ.14.58 கோடியும், இணை ஆணையர் காஞ்சிபுரம் ரூ. 11.75 கோடியும், இணை ஆணையர் மயிலாடுதுறை ரூ. 10.69 கோடியும், இணை ஆணையர் நாகப்பட்டினம் ரூ. 10.36 கோடியும், இணை ஆணையர் மதுரை ரூ. 9.2 கோடியும், இணை ஆணையர் தூத்துக்குடி ரூ.8.87 கோடியும், இணை ஆணையர் திண்டுக்கல் ரூ8.84 கோடியும், இணை ஆணையர் திருநெல்வேலி ரூ. 7.3 கோடியும், இணை ஆணையர் வேலூர் ரூ. 6.83 கோடி வசூல் செய்யப்பட்டது.

அதே போல் இணை ஆணையர் கோயம்புத்தூர் ரூ. 6.08 கோடியும், இணை ஆணையர் கடலூர் ரூ. 5.96 கோடியும், இணை ஆணையர் சேலம் ரூ. 5.91 கோடியும், இணை ஆணையர் தஞ்சாவூர் ரூ. 5.42 கோடியும், இணை ஆணையர் ஈரோடு ரூ. 5.14 கோடியும், இணை ஆணையர் சிவகங்கை ரூ. 3.08 கோடியும், இணை ஆணையர் திருவண்ணாமலை ரூ. 2.81 கோடியும், இணை ஆணையர் திருப்பூர் ரூ. 2.57 கோடி இணை ஆணையர் விழுப்புரம் ரூ. 1.61 கோடி என வசூல் செய்யப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான திருக்கோயில்களான சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் ரூ.5.4 கோடியும், பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ.4.11 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் ரூ.4.06 சென்னை, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ரூ.2.82 கோடியும், பூங்காநகர் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.72 கோடியும், சென்னை பாடி அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.15 கோடியும், சென்னை திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.1 கோடியும், திருச்சி, துறையூர், அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயிலில் ரூ.1.91 கோடியும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.1.91 கோடியும், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி திருக்கோயிலில் ரூ.1.61 கோடியும், இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகளாலும் திருக்கோயில்களின் வாடகை/ குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் திருக்கோயில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *