தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு (1947-1977) : பொன்முடி (1950)
1950ம் ஆண்டு திராவிட இயக்க சினிமாவின் எழுச்சிக்காலம் எனலாம் முன்னதாக 1949ல் வெளியான அண்ணாவின் வேலைக்காரியைத் தொடர்ந்து 1950ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான பொன்முடி தமிழ் சினிமாவில் திராவிட எழுச்சியை முழுமையாக அறிவித்த படம் எனலாம்.
இதே ஆண்டு வெளியான மந்திரிகுமாரியோடு மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து இரண்டு பகுத்தறிவு படங்களை தயாரித்து வரலாற்றில் இடம் பிடித்துக்கொண்டது.
அது போல அந்த இரண்டு திரைப்படங்களையும் இயக்கிய பெருமையுடன் ஒரே ஆண்டில் இரண்டு மிகப்பெரிய படங்களை இயக்கிய இயக்குனர் என்ற பெயரை எல்லீஸ்.ஆர்.டங்கன் பெற்றார்.
இப்படி சிறந்த தயாரிப்பு நிறுவனம் மிகச்சிறந்த இயக்குனர் ஆகியோர் அமையப்பெற்றாலும் பொன்முடியின் வெற்றிக்கு பாரதிதாசனின் கதை வசனம் முக்கிய பங்காற்றியிருந்தது.
ஏற்கனவே மாடர்ன் தியேட்டருக்கு 1947ல் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த ஆயிரம் தலைவணக்கிய அபூர்வ சிந்தாமணி படத்தின் கதை வசனத்தில் ஒரு பிரச்சனை உண்டான போது மாடர்ன் தியேட்டர் அதிபர் பாரதிதாசனை அழைக்க அவரும் உடனே வந்து எழுதிக்கொடுத்தார் .
இந்த நன்றிக்கடனுக்கு அப்போதே அடுத்த படத்துக்கு கதை வசனம் எழுதித்தருமாறு டிஆர்.சுந்தரம் கேட்டதற்கிணங்க பாரதிதாசன் ரோமியோ ஜூலியட் கதையை அடிப்படையாக வைத்து எழுதியிருந்த எதிர்பாரா முத்தம் என்ற நாவலை திரைக்கதை வடிவமாகி எழுதிக்கொடுத்தார்.
சிறு வயதில் குடிப்பழக்கம் ஒரு ஆணும் பெண்ணும் பெரியவர்களாகியும் காதலிக்கத் துவங்க அப்போது அவர்கள் காதலுக்கு ஏற்படும் தடைகளும் பின் அதை உடைத்து எப்படி இருவரும் சேர்க்கிறார்கள் என்பது தான் கதை.
இந்தப் படம் தமிழ் சினிமாவில் சந்திரலேகாவுக்கு அடுத்து வெளியான பிரம்மாண்ட படைப்பாகவும் நேர்த்தியான தொழில்நுட்பம் மற்றும் காட்சி மொழியோடும் வெளியான தமிழின் முதல் சிறந்த படம் என்று அறிவிக்கலாம்
பொதுவாக இயக்குனர் எல்லீஸ்.ஆர்.டங்கன் படங்கள் அனைத்திலும் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் அத்தனையும் நேர்த்தியாக இருக்கும் . இந்த தொழில்நுட்ப ஒழுங்கு அக்காலத்தில் வேறு யார் படங்களிலும் காணப்படவில்லை . என்றாலும் இந்த படத்தில் ஒளிப்பதிவு கூடுதல் நேர்த்தி .
வெளிப்புற காட்சிகள் டங்கன் காமிராவை கையாளும் போது ஒரு உலகத்தரம் இயல்பாகவே ஒட்டிக்கொள்கிறது.
குறிப்பாக வணிகர்கள் கூட்டமாக வியாபாரம் செய்ய செல்லும் காட்சியில் ஹாலிவுட் காவிய படங்களுக்கு நிகரான கட்டமைவுகள். இப்படி படம் முழுக்க பல புதுமைகள், இந்த புதுமை தோரணத்தை படத்தின் டைட்டிலிலேயே துவங்கிவிட்டன. தமிழ் சினிமாவின் வரலாற்றில் புதுமையான் பத்து டைட்டில்கள் என்றால் அதில் பொன்முடிக்கு நிச்சயம் இடமுண்டு
நாயகன் ஒரு முத்து வணிகன் என்பதால் கடற்கரை மணலில் முத்துக்கள் மூலமாக ஒவ்வொரு பெயரையும் எழுதி படம்பிடித்து கோர்த்திருந்த விதம் அசத்தல் படத்தின் முதல் காட்சி கடலுக்குள் முத்துக்குளிக்கும் மீனவர்களை அபாரமாக காட்சிபடுத்திய இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன் தொடர்ந்து இப்படத்தில் பல புதுமைகளை செய்திருந்தார். குறிப்பாக நாயகி மாதுரி 5 தேவி எழுதிய கடிதத்தை நாயகன் நரசிம்ம பாரதி வாசிக்கும் போது கடித்ததின் வரிகளினூடே மாதுரியின் முகத்தை சிறு வட்டமாக கடிதத்தின் மீது ஓட வைத்தது அசத்தல் டெக்னிக்.
சென்னை கடற்கரையிலிருந்து மனலை லாரியில் எடுத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டரில் கொட்டி பரப்பி அதில் காதல் காட்சியையும் இந்த டைட்டில் காட்சியையும் படம்பிடித்து ராண்டர் கை அவர்கள் அன்று இந்துவில் இப்படம் குறித்த கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஒருவேளை இந்த டைட்டில் காட்சி அப்படி எடுக்கப்பட்டதாக இருக்கலாம், அது போல கடற்கரையில் இடம்பெறும் காதல் காட்சிகளில் அதுவரை இல்லாத நெருக்கத்தை தமிழ் சினிமாவில் முதலில் காண்பித்த பெருமையும் இந்த படத்துக்கு சேரும். குறிப்பாக கடற்கரை காட்சியில் நாயகன் நரசிம்ம பாரதியும் நாயகி மாதுரி தேவியும் கன்னத்தோடு கன்னம் வைத்து உரசும் காம தீண்டல்களில் இந்த படம் வெளியாகி 70 வருடங்களுக்கு மேலாகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை .
தமிழ் சினிமாவில் முதன் முதலாக தமிழ்நாடு,தமிழன் என உரத்து பேசிய முதல் படமும் இதுதான். பாரதிதாசனின் எழுச்சிமிக்க வசனங்களில் பல இடங்களில் தமிழ் உணர்வு கொதித்து பிரவகிப்பதை காண முடியும் .
1947க்கு பின் தமிழ் சினிமாவில் நடந்த முக்கிய மாற்றங்களில் ஒன்று பாகவதர்களின் ஜில்பா தலைமுடிகள் சுத்தமாக கிராப்புக்கு மாறியதும் பாடல்கள் குறைந்து சண்டைக்காட்சியும் நடனக்காட்சியும் அதிகம் இடம்பிடிக்கத்து வங்கியதும்தான்
குமாரி கமலாவை போல அப்போது திருவாங்கூர் சகோதரிகளின் நடனத்துக்கும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தது. கல்பனாவில் அறிமுகமான இந்த திருவாங்கூர் சகோதரிகள் லலிதா,ராகினி,பத்மினி அப்போது பல படங்களில் நடன காட்சிகள் மட்டும் பங்களித்து கவனத்தை ஈர்த்தனர்.
இந்த படத்திலும் லலிதாவும் பத்மினியும் சிறப்பாக ஒரு நடன காட்சியில் மட்டும் பங்களிப்பு செய்தனர். அது போல சண்டைக்காட்சிகள் குறிப்பாக வாள் சண்டைகாட்சிகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருந்தது. இதனாலேயே ராஜா ராணி கதைகள் அதிகம் இடம்பெற துவங்கின
படத்தில் நரசிம்ம பாரதி மாதுரிதேவி நாயகன் நாயகியாக நடித்திருந்தார் வில்லன் பாத்திரத்தில் நடித்த எம் ஜி ஆரின் சகோதரர் எம் .ஜி. சக்கரபாணி அவர்களும், நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த காளி.என்.ரத்னம் ஆகியோருடைய நடிப்பும் குறிப்பிடும் படியாக இருந்தது.
– எழுத்தாளர். அஜயன் பாலா.
(தொடரும்)
பின் குறிப்பு : ஆசிரியரின் தமிழ் சினிமா வரலாறு பாகம் ஒன்று 1916-1947 நாதன் பதிப்பகம் வெளியீடாக நூலாக வெளி வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் பாகமாக இத்தொடர் 1948 துவங்கி தமிழ் சினிமா வின் முக்கிய வரலாற்றுத்தடங்களை விவரிக்கிறது.