ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம்

பண்டைய காலத்திலிருந்தே மனிதர்களின் அதிகார பசியை தீர்த்து கொள்ள போர் ஒரு சிறந்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்ல போனால் தனி நபர்களின் ஆசைக்காக லட்ச கணக்கான மக்கள் போரில் பரிதமாக இறந்துள்ளனர். கால சக்கரத்தால் இவை அனைத்தும் மாறிவிடும் என்று பார்த்தால், போர் செய்யும் முறை மாறியுள்ளதே தவிர மனிதர்களின் அதிகார பசி தீர்ந்த பாடில்லை. தற்போதுள்ள நவீன உலகத்தில் மனிதர்கள் எத்தனையோ துறைகளில் அபார வளர்ச்சி அடைந்து விட்டார்கள். ஆனாலும் மற்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் முடிந்தபாடில்லை. இதற்கு தக்க உதாரணம் தற்போது ரஷ்யா- உக்ரைனுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் போர் சூழல் தான்.

இரு நாடுகளுக்கும் என்ன பிரச்சனை

1990-ம் ஆண்டு வரை உக்ரைன் சோவியத் ஒன்றியத்துடன் தான் இருந்தது. பின்னர் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தங்களுக்கு என  அரசாங்கத்தை உருவாக்கி ஆட்சி செய்ய ஆரம்பித்தது.தற்போதும் உக்ரைன் தன் எல்லைகளை ரஷ்யாவோடும், ஐரோப்பிய நாடுகளுடன் பங்கீடு கொண்டு தான் இருக்கிறது. மேலும் மொழி ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் உக்ரைன் மக்கள் ரஷ்ய மக்களோடு ஒன்றுபட்டு தான் இருக்கிறார்கள். மேலும் ரஷ்ய மொழியை பேசும் கணிசமான மக்கள் உக்ரைனிலும் இருக்கிறார்கள். 

கடந்த 2014-ம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த உக்ரைன் பிரதமர் விக்டர் யானுகோவிச் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு ரஷ்யாவிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுக்க உக்ரைனின்  தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியது ரஷ்யா. மேலும் உக்ரைன் கிழக்கு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளித்தது. இதுவே இரு நாடுகளிடையே பிரச்சனை உருவாக முதல் காரணமானது.  இப்பிரிவினைவாதிகளுக்கும், உக்ரைன் இராணுவத்திற்கும் நடந்த தாக்குதலில் இதுவரை 15,000 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட முதல் ஒப்பந்தம் – மின்ஸ்க் ஒப்பந்தம் 

 இந்நிலையில் 2015-ம் ஆண்டு உக்ரைன் அதிபராக இருந்த  பெட்ரோ பொரொஷென்கோ-க்கும் , ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்-க்கும் இடையே புதிதாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அது மின்ஸ்க் ஒப்பந்தம்  என்று அழைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவோடு கிழக்கு உக்ரைனில் இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்சனையைத் தீர்ப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.அதன் பிறகு 20க்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. தொடர்ந்து எல்லையில் இரு தரப்பு படையினரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ரஷ்யா, உக்ரைன் இருநாடுகளுமே கிழக்கு உக்ரைன் பிரதேசத்தைக் குறித்து தங்களுக்கென தனித்தனிப் பார்வையைக் கொண்டுள்ளன. அது ஒன்றோடொன்று ஒத்துப் போகாமல் இருக்கிறது என்கிறார் சதம் ஹவுஸ் அசோசியேட் ஃபெல்லோவான டன்கன் ஆலன்.

தேர்தல் பிரச்சன்னைகள்  

உக்ரைன் தன் நிலப்பரப்புகளை மீண்டும் தன் நாட்டோடு இணைக்கவும், தன் இறையாண்மையை நிலைநிறுத்தவும் விரும்புகிறது, ஆனால் ரஷ்யாவோ, கிவ் (Kyiv) நகரத்தில் உள்ள அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தி கிழக்கு உக்ரைன் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து அல்லது தன்னாட்சி அதிகாரத்தைப் பெற முயல்வதாக கருதப்படுகிறது.உக்ரைன் உள்நாட்டுத் தேர்தலை நடத்தவில்லை என்றும், கிழக்கு உக்ரைனுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல் அலைக்கழிப்பதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால் உக்ரைன் அரசாங்கமோ, கிழக்கு உக்ரைனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவிட்டதாகக் கூறுகிறது.மின்ஸ்க் ஒப்பந்தத்தின் படி, உக்ரைன் தன் நிலப்பரப்புகளை ரஷ்யாவிடமிருந்து முழுமையாக பெறுவதற்கு முன், உள்நாட்டில் தேர்தலை நடத்த வேண்டும்.

கிழக்கு உக்ரைனில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றால், அப்பகுதி முதலில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என வலியுறுத்துகிறது உக்ரைன். இல்லையெனில் தேர்தல் ரஷ்யாவின் அழுத்தத்தின் கீழ் நடைபெறும் என உக்ரைன் தரப்பு கூறுகிறது.உள்ளூர் அளவிலான தேர்தல்களை நடத்தாமல் உக்ரைன், கிழக்கு உக்ரைன் பகுதிகளைப் பெற அனுமதிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யா கடுமையாக எச்சரித்தது.உக்ரைனின் இறையாண்மையைக் கட்டுப்படுத்த நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது என புதிய வாதத்தையும் முன் வைத்துள்ளது ரஷ்யா. மேலும் நேட்டோ அமைப்பு கிழக்கு நோக்கி முன்னேறுவதை நிறுத்துவது தொடர்பாக முறையாக உறுதியளிக்க வேண்டும் என்றும் தன் வாதங்களை முன் வைத்துள்ளது ரஷ்யா.

1 லட்சம் ராணுவ வீரர்களை குவித்த ரஷ்யா

இந்நிலையில் தற்போது மீண்டும் ரஷ்யா – உக்ரைனுக்கு இடையே மீண்டும் போர் சூழல் உருவாகியுள்ளது. அதனால் 1 லட்சம் இராணுவ வீரர்கள் மற்றும் நவீன் போர் கருவிகளை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது அமெரிக்கா. மேலும் இரு நாடுகளிடையே உள்ள பிரச்னையை சுமுகமாக முடித்து வைக்க அமெரிக்கா பேசி வருகிறது. ஆனாலும் இரு நாடுகளிடையேயும்  நாளுக்கு நாள் போர் சூழல் அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வுலம் ஏற்கனவே நிறைய போர்களை சந்தித்துவிட்டது. போரால் ஏற்படும் உயிரிழப்புகளும், பொருளாதார பாதிப்பும் சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எப்போது அனைத்து நாடுகளும் போர் கருவிகளை உருவாக்குவது நிறுத்திக்கிறதோ அப்போது தான் மனிதர்களுக்கு வழமையான எதிர்காலம் உருவாகும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *