பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர் – அம்பேத்கர் ஆன கதை… சட்டமேதையின் வாழ்க்கை பயணம்!

சாதிக் கொடுமையால் இருண்ட உலகத்தைத் தன்னுடைய பரந்த அறிவால், ஞானத்தால் விடிய வைத்த விடிவெள்ளி அண்ணல் அம்பேத்கர். வேண்டாததை நீக்கிய சிற்பி; வேண்டியதைச் சேர்த்த ஓவியர். அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒளித்த அண்ணல் அம்பேத்கரின் 131வது பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய நினைவுகளை காண்போம்…

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பி.

பிறப்பு முதல் சட்டப்படிப்பு வரை:

1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி அன்று, அப்போதைய உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்த மாவ் என்ற ஊரில் (தற்போது இது மத்தியப்பிரதேசத்தில் உள்ளது) ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். அம்பேத்கருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்பதாகும். அப்பா ராணுவப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். சின்ன வயதில் இருந்தே தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்ததால் அம்பேத்கர் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளானார்.

இவர் படித்த பள்ளியில் கூட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியாக தரையில் அமரவைக்கப்படுவது, தனி மண்பானையில் தண்ணிர் குடிப்பது என பல துன்பங்களுக்கு ஆளானார். ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று மாற்றிக்கொண்டார்.

1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.

பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.

1915ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு, ‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.

தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்குரலாக முழங்கிய அம்பேத்கர்:

  • இந்தியா திரும்பிய அம்பேத்கர், 1924ம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடினார்.
  • 1931 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனி தொகுதியை பெற்றுத்தந்தார். இதுதொடர்பாக காந்தி மற்றும் அம்பேத்கர் இடையிலான பூனா ஒப்பந்தம் மூலம் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.
  • 1927 ஆம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார்.
  • 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
  • 1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது.
  • தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் கருதிய அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார்.
  • 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்த அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு புத்த மதத்தில் இணைந்தார். அதே ஆண்டு ‘புத்தரும் அவரது தம்மாவும்’ என்ற நூலினை எழுதினார்.

அம்பேத்கர் மூலம் கிடைத்த உரிமைகள்:

இந்தியாவில் பட்டியல் சாதியினருக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு, தேர்தலில் தனித்தொகுதி, இந்துப் பெண்களின் பரம்பரைச் சொத்துரிமை ஆகியவை கிடைப்பதற்கு முதன்மைக் காரணமாக விளங்கினார். தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை, வருங்கால வைப்பு நிதி உள்படத் தொழிலாளர் உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்தார். அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவராக அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள், சிவில் உரிமைகள் உறுதி செய்யப்படுவதற்கும் இந்தியா ஒரு இறையாண்மைமிக்க மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக உருவாவதற்கும் முக்கியப் பங்காற்றினார்.

இன்றைய காலத்திற்கு பொருந்தும் அம்பேத்கரின் பொன்மொழிகள்:

“இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல இனக்குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால், இந்தியாவின் பூர்வ குடியான தமிழர்களே கொண்டாட முடியும்”

“ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும், சக மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருத்துமாயின், அது மதம் அல்ல. அது கேலிக்கூத்து”

“நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் – அறிவு, இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை, மூன்றாவது தெய்வம்– நன்னடத்தை”

“ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.”

“சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.”

“வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட அம்பேத்கருக்கு 1955ம் ஆண்டு முதல் உடல்நிலை மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் டெல்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *