என் பையன் சாவுக்கு அவங்க தான் காரணம்… சிறுவனின் தாய் கதறல்!

சென்னை வளசரவாக்கம் அருகே ஆழ்வார் திருநகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கிய 7 வயது சிறுவன் தீக்ஷித், பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது பள்ளி வாகனத்தை ஓட்டுநர் பின்னால் இயக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் சக்கரத்தில் சிறுவன் சிக்கிக்கொண்டான். இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் அவர் ஆய்வு செய்தார். சிறுவனின் மரணம் தொடர்பாக, வேன் ஓட்டுநர் பூங்காவனம், வாகன உதவியாளர் ஞானசத்யா, தலைமை ஆசிரியர் தனலட்சுமி மற்றும் பள்ளி தாளாளர் சுபாஸ் ஆகிய 4 பேர் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஓட்டுநர் மற்றும் வாகன உதவியாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கண்ணீர் மல்க பேட்டியளித்த சிறுவனின் தாய் ஜெனிபர், காலை 8.30 மணிக்கு பள்ளி வேனில் ஏற்றி அனுப்பியதாகவும், அடுத்த 10 நிமிடத்தில் விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார். பள்ளியில் என்ன நடந்தது என்று இதுவரை பள்ளி தரப்பில் யாரும் தன்னிடம் விளக்கமளிக்கவில்லை என கூறிய அவர், பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து ஆறுதல் கூட சொல்லவில்லை என்றார். குழந்தையின் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகம்தான் முழு பொறுப்பு எனவும் தாய் ஜெனிபர் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுவனின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது. உடலை வாங்க பெற்றோர் மறுத்த நிலையில், அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சிறுவனின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *