ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்… முன்னாள் மாணவருக்கு முன்ஜாமீன்!
சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், மேற்குவங்கத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்ஷுக் தேப்சர்மா முன்ஜாமீன் பெற்றதால் விடுவிக்கப்பட்டார்.
எஸ்சி எஸ்டி பிரிவு வழக்குகளில் கைது செய்து சென்னை அழைத்துவர தனிப்படை போலீசார் திட்டமிட்ட நிலையில், தமக்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக மாணவர் தெரிவித்ததால் மருத்துவ பரிசோதனைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மாணவர்கள் சுதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகட்டோ மற்றும் பேராசிரியர் எடம்மன்ன பிரசாத் ஆகியோரிடம் மயிலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
2 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அதன்படி முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்ஷுக் தேப்சர்மாவை வரும் 31ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் மயிலாப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.