சிறந்த பள்ளி முதல் கிராம பஞ்சாயத்து வரை… 6 விருதுகளை அள்ளிய தமிழகம்!
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு மத்திய ஜல்சக்தித்துறை சார்பில் தேசிய நீர் விருது டெல்லியில் இன்று வழங்கப்பட்டது.
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம், முதலிடம் பிடித்த நிலையில், ராஜஸ்தான் 2ம் இடம் பிடித்தது. தமிழ்நாடு அரசு 3ம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு அரசுக்கான விருதை தமிழ்நாடு நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
ஒட்டுமொத்த அளவில், தமிழ்நாட்டிற்கு 6 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த கிராம பஞ்சாயத்துக்கான தென்மண்டல பிரிவில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ளப்புதூர் பஞ்சாயத்து 2வது இடத்தையும்,
சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புப்பிரிவில், மதுரை மாநகராட்சி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
மேலும், சிறந்த பள்ளிகள் பிரிவில் காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், சிறந்த தொழில் பிரிவில், ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம், தமிழ்நாடு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
அதேபோல, சிறந்த தன்னார்வ தொண்டு நிறுவ பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.