இந்த வகை நியாயவிலைக்கடைகள் விரைவில் பிரிப்பு… அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி!
1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் திருவையாறு தொகுதி திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நியாயவிலைக் கடையை பிரித்து, கிறித்தவ தெரு பகுதியில் பகுதிநேர நியாயவிலைக்கடை அமைக்க அரசு ஆவன செய்யுமா என சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பகுதி நேர நியாயவிலைக் கடை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
மேலும், 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூறிய அவர், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் ஒரே நியாயவிலைக் கடைகளில் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் இருக்கிறது என்றும், எங்கெல்லாம் பிரிக்க வேண்டிய தேவை இருக்கிறதோ, அங்கெல்லாம் கடைகள் பிரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒரு முழு நேர நியாயவிலைக் கடை அமைக்க ரூ.3 லட்சம் செலவாகும் சூழலில், சொந்த கட்டடங்களும் கட்டப்பட வேண்டிய தேவை இருப்பதாக கூறிய அவர், உணவுத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையுடன் ஆலோசித்து, விரைவாக பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்தார்.